Temple info -3338. Ranganatha Perumal Temple,Keezaiyur, Nagapattinam ரங்கநாத பெருமாள் கோயில்,கீழையூர்,நாகப்பட்டினம்
Temple info -3338
கோயில் தகவல் -3338
Arulmigu Ranganatha Perumal Temple /அருள்மிகு ரங்கநாதா பெருமாள் டெம்பிள்/ ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் "கீழரெங்கம்", கீழையூர் / Keelaiyur, Nagapattinam District, Tamil Nadu.
கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில்
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் கீழரங்கம்
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் சுமார் 24 கி.மீ., தொலைவில் கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் தன் பக்தனுக்க கிருஷ்ணனாகக் காட்சி தந்து, பின் அரங்கனாகப் பள்ளி கொண்ட திருத்தலம் இது. பூர்வ என்றால் வடமொழியில் முழுமையான குறைவில்லாத எனப்பொருள். அதனால் இத்தலம் பூர்வாங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. பூர்வஜன்ம வினைப்பயனால் உண்டான தோஷங்களைக்கூட தரிசித்த மாத்திரத்தில் தீயினில் இட்ட தூசு போல காணாமல் போக்கும் பெருமாள் அருளும் தலம், கீழையூர்.
பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்ற ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கம் - மத்தியரங்கம், கர்நாடகத்து ஸ்ரீரங்கப்பட்டினம் - மேலரங்கம், மாயவரம் - வடரங்கம், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம், இத்தலம் கீழரங்கம்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷி தான் மகளாக வளர்ந்த மகாலட்சுமியை பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின் ஐந்து ரங்கத் தலங்களுள் நான்கிற்குச் சென்று பெருமாளையும் மகாலட்சுமியையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக பூர்வரங்கம் அல்லது கீழை அரங்கம் என அழைக்கப்படும் அரங்கத்தில் உறையும் அரங்கனைத் தேடி அலைந்தார். அரங்கனைக் காண முடியாததால் அங்கேயே தவம் இருக்கத் தொடங்கினார். கால ஓட்டத்தில் மெதுவாக புற்று வளர்ந்து அவரை மூடியது. ஒருநாள், அந்தக் கானகத்தில் எழுந்த குழல் ஓசை, தவம் செய்த முனிவரையும் கவர்ந்திழுத்தது. அதனால், உள்ளேயிருந்து வெளிப்பட்ட ரிஷி, குழலோசை வந்த திக்கை நோக்கிச் சென்றார். அங்கே கால்நடை மேய்க்கும் சிறுவன் ஒருவன் குழலிசைப்பதைக் கண்டார்.சிறிது நேரத்தில் சிறுவன் உருமாறி கண்ணனாகக் காட்சியளித்தான். வணங்கிய முனிவர். 'அரங்கன் வடிவில் தரிசனம் தந்து வரங்கள் அருள வேண்டும்' என்று வேண்டினார். உடனே, திருவரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் குண திசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி யோக நித்திரையில் காட்சிதந்தார். பெருமாள் மார்க்கண்டேய மகரிஷிக்கு பெருமாள் காட்சி கொடுத்தது. தை மாதம் இரண்டாம் நாளாகும். பெருமாள் அன்று முதல் தன்னருகே மார்க்கண்டேய மகரிஷி கருவறையிலேயே இருக்குமாறு செய்தார்.
கருவறையில் ஆனந்த விமானத்தின் கீழ் இடக்கை பக்கவாட்டில் இருக்க வலக்கையைத் தலை அருகில் வைத்து யோக சயனத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் தலையருகே மார்க்கண்டேய மகரிஷியும், திருவடி அருகே பூதேவியும் உள்ளனர் யோக மூர்த்தியாக இருப்பதால் நாபிக் கமலத்தில் பிரம்மா கிடையாது. மார்க்கண்டேய மகரிஷிக்கு முதலில் ஆயன் உருவில் காட்சி தந்ததால், உற்சவர் ஆயனார் என்ற திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
கோயிலில் வடக்கே உள்ள புஜ்கரணியின் அருகே ரங்கநாயகித்தாயார் தவம் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமணங்குடி என்னும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு உள்ளது. எனவே இங்கு ரங்கநாயகித் தயாரிடமும், பெருமாளிடமும் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு பாலும் பழமும் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு கொடுத்தால் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. வாழைப்பழம், உலர்திராட்சை, முந்திரி, கல்கண்டு போன்றவற்றை தாயாருக்கு நைவேத்யம் செய்து சிறுகுழந்தைகளுக்குத் தந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் இத்தலத்தில் அனைத்து திருவிழா, உற்சவங்களும் திருவரங்கத்தினைப் போலவே நடைபெறுகின்றன.


Comments
Post a Comment